மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-3
வாழ்வுரிமை!
உயிர் வாழும் உரிமையும், நம்மை அழிக்க நினைப்பவனை எதிர்த்துப் போராடும் உரிமையும் இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். அது போலவே தற்கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தடுக்கவும் செய்கிறது என்பதும் வாழ்வுரிமையின் மற்றொரு பாகமாகும். மற்றவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை, ஆனால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பது சிலரின் எண்ணம். அதனாலேயே வாழ்க்கையில் விரக்தியும் துக்கமும் அதிகமாகும்போது மரணத்தில் அபயம் தேடுகின்றனர்.
கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலத்தவரே மற்ற மக்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது புள்ளி விவரக் கணக்கு. நமக்கு வாழ்க்கை அருளிய அல்லாஹ்வுக்கே அதை பறிக்கும் உரிமை உண்டு என்ற அசையாத நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கும் காரணத்தால் சமீப காலம் வரை முஸ்லிம்களுக்கிடையில் தற்கொலை என்பது பெயரளவில் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் மேற்கத்திய நாகரிக மோகம் இப்போது முஸ்லிம்களுக்கு இடையிலும் வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்குமிங்குமாக முஸ்லிம்களுக்கு இடையிலும் தற்கொலை பரவிவருகிறது. வாழ்வதற்கு அல்லாஹ் வழங்கிய உரிமையை நிராகரித்து தற்கொலை செய்து கொள்வதை இஸ்லாம் கண்டிப்பதோடு அதை ஒரு மோசமான குற்றமாக பார்க்கிறது.
அது குறித்து சில நபிமொழிகள்,
" இரும்பை உபயோகித்து ஒருவன் தற்கொலை செய்து கொண்டால் அதே இரும்பைக் கொண்டு தன்னுடைய வயிற்றை வெட்டி கொண்டு இருப்பவனாக அவன் நரகத்தில் என்றென்றும் இருப்பான். விஷம் குடித்து தற்கொலை செய்து இருந்தால் நரகத்தில் என்றென்றும் கிடந்து விஷமருந்தி கொண்டிருப்பான். ஒருவன் மலையிலிருந்து விழுந்து இருந்தால் நரகத்தில் அவ்வாறு விழுந்து கொண்டே இருப்பார்.
-(புகாரி, முஸ்லிம்)
" எதை உபயோகித்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதை வைத்தே அவன் தண்டிக்கப்படுவார்."
-(புகாரி)
" முந்தைய சமூகத்தில் ஒரு நபர் கத்தியால் கையை வெட்டி அதன் மூலம் இரத்தம் வெளியேறி அவர் இறந்து போனார. அப்போது அல்லாஹ் அவனது உயிர் பற்றிய விஷயத்தில் எனது அடியான் அவசரப்பட்டு விட்டான். அதனால் நான் அவனுக்கு சுவனத்தை ஹராம் ஆக்கிவிட்டேன் " என்று கூறினான்.
-(புகாரி, முஸ்லிம்)
தாத்துஸ் ஸலாசில் போர் நடந்து கொண்டிருக்கும்போது ஓரிரவில் அம்ர் இப்னு ஆஸ்(
ரலி) அவர்களுக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஆகிவிட்டது. கடுங்குளிர் காலமாக இருந்த காரணத்தால் குளிர்ந்த நீரில் குளித்தால் இறந்து விடுவோமோ என்று பயந்த அம்ர் இப்னு ஆஸ்(ரலி) தான் தயம்மும் செய்து விட்டு மற்றவர்களோடு சேர்ந்து தொழுகையை நிறைவேற்றினார்கள். போர் முடிந்து மதீனாவை அடைந்த பிறகு இவ்விபரமறிந்த நபி(ஸல்) அவர்கள் அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களை அழைத்து விசாரித்தார்கள்.
அப்போது அவர்கள், " அல்லாஹ்வின் தூதரே அதிக குளிரான நீரில் குளித்தால் இறந்து போவேனோ என்று நான் பயந்தேன். அல்லாஹ் குர்ஆனில் " நீங்கள் உங்களையே கொலை செய்யாதீர்கள் " என்று கூறிய வசனம் நினைவில் வந்தது. அதனாலேயே நான் தயம்மும் செய்து விட்டு தொழுதேன் " என்று கூறினார்கள். இதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹ் அவர்கள் சிரித்துக் கொண்டே அவர்கள் செய்த காரியத்தை அங்கீகரிக்கவும் செய்தார்கள்.
-(அபூதாவூத்).
-அஸ்ரஃப் கல்பெட்டா
-தொடரும்.....
Comments
Post a Comment